Home Tamil Nadu India Planet Earth Human Freedom


சிறப்பான நெய்வேலி நகர நிர்வாகம்.


Effective City Government in Neyveli


சில வாரங்களுக்கு முன்பு, தினமனியில் வெளிவந்த செய்தி.



நெய்வேலி நகர நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. சமீபகாலத்தில்வந்த புயலால், கடலூர் நகரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. ஆனால், கடலூர் அருகில் இருக்கும் நெய்வேலிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நெய்வேலி ரோடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. நெய்வேலி வீடுகளின் உள்ளே தண்ணீர் புகவில்லை. இந்த புயலால், நெய்வேலி மக்கள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக வில்லை.



தினமனியில் அதற்கான காரணமும் தெளிவாக சொல்லப்பட்டு இருந்தது. அதாவது, நெய்வேலியில், வழக்கமான நகராட்சி, மேயர், சேர்மன், கவுன்சில் என்ற எந்தவித அமைப்பும் கிடையாது. நெய்வேலியில், அனல்மின் நிலையத்தின் நிர்வாகமே, நகர மேலாண்மைக்கு அதிகாரிகளை நியமித்து, நகரத்தை நிர்வாகிக்கும் முழுபொறுப்பை அளித்து இருக்கின்றது. ஆக, அந்த அதிகாரிகள், ரோடுகளை, கால்வாய்களை எல்லாம் நன்கு பராமரித்து வருகின்றனர். ஆதலால், புயல் வந்தும்கூட எந்தவித பாதிப்பும் இல்லை.



ஆக, புயல் வரும்முன் காப்பவன் தான் அறிவாளி;

அது வந்தபின் தவிப்பவன் ஏமாளி.



முதலில், தினமனிக்கு நன்றி. இந்த நற்செய்தியை வெளியிட்டதற்காக.



ஆக, நகர நிர்வாகத்தை மாற்றி அமைத்தால், அந்த நகர நிர்வாகிகள், முழுபொறுப்பை உணர்ந்து, முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவார்கள் என்ற உண்மையை தெளிவாக உணரமுடிகின்றது.



இப்ப இருக்கின்ற நகர நிர்வாகம், முழுபொறுப்பு எடுக்கவும் முடியாமல், வரும் ஆபத்தை எதிர்கொள்ளவும் தெரியாமல், சென்னையிலிருந்து ஆணைக்காக காத்துக்கிடக்கின்றது. எல்லாம், புயல் வந்தபின் தவிக்கும் நிலையே நிரந்தரமாக ஆகிவிட்டது.



வருடம் வருடம், நிவாரணம். ஒவ்வொரு ஆண்டும், இப்படி வீணடிக்கின்ற நிவாரண நிதியை, சரியான திட்டம்போட்டு செயல்படுத்தியிருந்தால், வந்தபின் தவிக்கும் நிலையை தவிர்த்திருந்திருக்க முடியும்.



மக்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணம் - அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சம். அரசின் இயலாமையை, கண்டுக்காதீங்க; இந்த நிவாரண தொகையை வாங்கிக்கொண்டு போய்விடுங்க என்று அர்த்தமாகிறது.



ஆட்சிகள் மாறும்போது, அரசியல்வாதிகள் மாறுகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் என்பவர்கள் எப்பொழுதுமே நிரந்தரமான ஊழியர்கள்தானே. இந்தமாதிரியான நிர்வாக சீர்கேடுக்கு, அரசு அதிகாரிகள்தான் முழுபொறுப்பேற்க வேண்டும்.



அரசு அதிகாரிகள் முன்வந்து சொல்லுங்கள். புயல் வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க முன்வந்தோம்; ஆனால் மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள் எங்களை வேலை செய்யவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று.



அப்படி எதுவும் செய்தி வருவதில்லையே. ஆக, நமது அரசு நிர்வாகிகளுக்கு, சிறப்பான நிர்வாகம் செய்யும் திறமை இல்லை என்றுதானே அர்த்தம். சிறப்பான நிர்வாக மேலாண்மை பயிற்சி வேண்டும் என கேளுங்கள்; நிச்சயம் செய்து கொடுப்பார்கள்.



அதெப்படி, ஒரு பத்து சதவீதம்கூட அரசு நிர்வாகிகள், சிறப்பான செயலாற்றுபவர்கள் என்று தேறமாட்டேங்கிறீங்க.



தமிழக அரசு துறை என்பது - ஒரு மாபெரும் டயானாசர் மாதிரி இருக்கு. ஒவ்வொரு துறையிலேயும், பல ஆயிரம்பேர் வேலைக்கு இருக்கிறார்கள். ஆனா, ஒரு வேலையும் சிறப்பாக நடக்க மாட்டேங்கிறது. எதிர்வரும் சவாலை டயானசாரால் உணரமுடியவில்லை; உணர்ந்தாலும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை.



சிறப்பான மேலாண்மைக்கு அடிப்படை தேவை - ஒரு மாபெரும் டயானாசர்க்கு பதில், பல நூறு குதிரைகள் தேவை. அதாவது, நெய்வேலி மாதிரி, நகர் நிர்வாகம் முழுபொறுப்பெடுத்து செயலாற்றும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.



மாநில அரசாங்கம் சென்னையிலிருந்து, கொள்கைகளை வகுத்து, பட்ஜெட் போட்டு, நகர அரசாங்கத்துக்கு நிதி வழங்க வேண்டும். அந்த நிதியை சரியான் வழியில் பயன்படுத்தி, சிறப்பான நிர்வாகத்தை நகர அரசாங்கம் செய்ய வேண்டும். அதற்கு வேண்டிய வேலையாட்களை தேர்வு செய்வது, அவர்களது சம்பளம், அவர்களது செயல்பாட்டை ரிவியூ செய்வது; நல்ல செயலாலராக இருந்தால் பதவி உயர்வு, சம்பள உயர்வு; நகர நிர்வாகத்துக்கு முழு உரிமை அளிக்க வேண்டும்.



சுருக்கமாக சொன்னால், நகரங்களில் சுயாட்சி; சென்னையில் கூட்டாச்சி.



டில்லி செய்யும் காரியத்தைத்தான், சென்னை செய்ய வேண்டும்.



நகரங்களுக்கு சுயாட்சி வழங்காமல், குட்டிக்கரணம் போட்டாலும் சிறப்பான நிர்வாகத்தை செயல்படுத்த முடியாது.



அது அரசாங்கமாக இருந்தாலும்சரி, வியாபார கம்பெனியாக இருந்தாலும் சரி, இதுதான் உண்மை. பல சுயாட்சி நகர நிர்வாகங்களின் சிறப்பான செயல்பாடுகள் ஒன்று சேர்ந்து, மாநில அரசாங்கத்துக்கு சிறப்பு சேர்க்கும்.

Year 2007 Articles...       Year 2005 Articles...       Year 2004 Articles...
 
Reproduction or translation into any language, in whole or in part, in any form or medium without express written permission
from us is prohibited. contact S. Balachandran [balachandran@muthamil.com]
All rights reserved. © 2007 Muthamil.com