Home Tamil Nadu India Planet Earth Human Freedom


மீண்டும் மீண்டும் இடைத்தேர்தல்


சென்னை, டிசம்பர் 30.

மதுரையில் மீண்டும் மீண்டும் இடைத்தேர்தல்.

மூன்று வருடங்களில், மூன்று மக்கள் பிரதிநிதிகள்

இறந்துபோய் விட்டார்கள். மூவருமே,

உடல் ஆரோக்கியமில்லாததால் மறைந்து போனார்கள்.



இது மிக வருத்தத்துக்குரிய, வேதனையான விசயம்.

மக்களின் பிரநிதிகளும் சரி, மதுரை வாழ் மக்களும் சரி,

உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் இறந்துபோய் விடுகிறார்களே

என்று உணரும்போது, மனது வேதனையாகத்தான் இருக்கிறது.



மக்களை விடுங்கள். இந்த மக்களின் பிரதிநிதிகளுக்காகவாவது,

மாநில அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

மக்களின் பிரதிநிதிகளுக்கு, அரசே, மருத்துவ இன்ஸ்யூரன்ஸ்

செய்து கொடுக்கலாம். அப்படி செய்து கொடுத்தால்,

இந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ரெகுலராக மருத்துவரிடம் சென்று,

உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பார்கள்.



சட்டமன்ற உறுப்பினர்கள், உடல் ஆரோக்கியத்தோடு,

உயிரோடு இருந்தால், இடைத்தேர்தலை தவிர்க்கலாம்.

இடைத்தேர்தலுக்கு செலவழிக்கும், வரிப்பணத்தை, சட்டமன்ற

உறுப்பினர்களின் மருத்துவ இன்ஸ்யூரன்ஸுக்கு செலவழிக்கலாம்.



வேறு எந்த வழிகளில், இடைத்தேர்தலை தவிர்க்கலாம் என்று பார்க்கும்போது,

அமெரிக்காவில், இடைத்தேர்தல் கிடையாது. சமீபத்தில், அமெரிக்க

பாராளுமன்ற உறுப்பினராக (செனட்டர்) ஒபாமா, ஜனாதிபதியாகி விட்டார்.

அதுபோல, ஹில்லரி கிளிண்டன், செக்ரட்டரி ஆப் ஸ்டேட்

பதவியேற்க போகிறார். இவர்கள் இருவரது செனட் சீட் காலியாகிவிடும்.

ஆனால், இடைத்தேர்தல் கிடையாது.



ஒபாமா, சிக்காகோ (இல்லினாய்) மாநிலத்திலிருந்து செனட்டராக

தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹில்லரி கிளிண்டன், நியூயார்க் மாநிலத்திலிருந்து

செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக, அங்கே இடைத்தேர்தலுக்கு பதிலாக,

அந்த மாநில கவர்னர், சரியான ஒருவரை தேர்வு செய்து, செனட்டராக

அறிவித்து விடலாம். மாநில கவர்னருக்கு, முழு அதிகாரம் உண்டு.



ஆனால், அங்கேயும் அரசியல் நாறிப்போய் கிடக்கிறது.

பதவியின் பெருமையை உணராமல், கிடைத்திருக்கும் அதிகாரத்தின்

மதிப்பையும் உணராமல், தன்னோட பொறுப்பையும் உணராமல்,

அந்த மாநில கவர்னர், ஒபாமாவின் செனட் சீட்டை, ஏலம் விட்டு இருக்கிறார்.



சரியாக எல்லோரும் நடந்து கொண்டால், இது சரியான முறையாக அமையும்.

நம்ம ஊரில், கவர்னருக்கு அதிகாரம் கொடுக்க முடியாது. மாநில முதல்வருக்கும்

அதிகாரம் கொடுக்க முடியாது. அந்த கட்சி தலைவருக்கு கொடுக்கலாம்.

அப்படி வழிமுறையை ஏற்படுத்தினால், திருமங்கலத்தில் இடைத்தேர்தல்

இல்லாமல் போய்விடும். அங்கே ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் என்பதால்,

வைகோ, தன் கட்சியிலிருந்து வேறு ஒருவரை திருமங்கல

சட்டமன்ற உறுப்பினராக நியமனம் செய்து விடலாம்.



இதிலே ஒரு பெரிய சிக்கல். கட்சி தலைவருக்கு அதிக அதிகாரம்

கிடைத்துவிடுகிறது. சிலசமயம், தங்கள் சொல்படி கேட்காத சட்டமன்ற

உறுப்பினரை போட்டுத்தள்ளிவிட்டு, வேறு ஒருத்தரை நியமனம்

செய்துவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆக, இது சரியான முறையல்ல.



அதுக்கு பேசாமல், வரிப்பணம் வீணாகினாலும் பரவாயில்லையென்று,

இடைத்தேர்தல் வைத்துவிடுவதே மேல்.



மாநில கவர்னரை, மக்களே நேரடியாக தேர்ந்தெடுத்துவிட்டால்,

இடைத்தேர்தல், மிகச்சாதரணமாக நடக்கும்.



இப்ப இருக்கின்ற முறையில், மாநில முதல்வரின் பதவி, ஆடிக்கொண்டே இருப்பதால், இடைத்தேர்தல், அடிதடியோடு நடக்க வேண்டி இருக்கின்றது.



மாநில முதல்வரின் பதவி, ஐந்து ஆண்டுகளோ, நான்கு ஆண்டுகளோ,

நிலையானது என்று ஏற்படுத்திவிட்டால், அரசியல் மிகவும்

நேர்மையானதாக மாறிவிடும்.



இப்ப பாருங்க, காஷ்மீர் தேர்தலை. எவ்வளவு செலவு செய்து,

எவ்வளவு பாதுகாப்பு சவால்களுக்கு இடையில்,

மக்கள் ஓட்டு போட்டு இருக்கின்றார்கள்.

ஆனால், மாநில முதல்வர் யார் என்பதில் குழப்பம்.

மூன்று ஆண்டு - நீ; மீதி - நான் என்று,

எழுதப்படாத அரசியல் சட்டத்தை உருவாக்கி, தற்காலிக தீர்வை காண்கிறார்கள்.

நிலையான தீர்வை ஏற்படுத்துவதில் என்ன சிரமம் என்று தெரியவில்லை.



ஆக, குறைந்தது, மக்களின் பிரதிநிதிகளுக்கு, மருத்துவ இன்ஸ்யூரன்ஸ்

வழங்குங்கள். அப்படி செய்தால், மக்கள் பிரதிநிதிகள்,

தங்களது உடல் ஆரோகியத்தை பேணிக்காப்பார்கள்.

Year 2007 Articles...       Year 2005 Articles...       Year 2004 Articles...
 
Reproduction or translation into any language, in whole or in part, in any form or medium without express written permission
from us is prohibited. contact S. Balachandran [balachandran@muthamil.com]
All rights reserved. © 2007 Muthamil.com