Engineering Excellence
  • Engineering Excellence February 06, 2009

    இட்லி மாவு அரைக்க, ஒரு இயந்திரம் செய் என்று சொன்னால், நமது பொறியியல் வல்லுனர்கள், முதலில், வடிவமைக்க கம்ப்யூட்டர் வேண்டும் என்று கேட்கிறார்கள். பிறகு, ஆயிரத்தெட்டு சாப்ட்வேர் வேண்டும் என்று கேட்கிறார்கள். வடிவமைத்த பிறகு, அந்த இயந்திரத்தை உருவாக்க, வெளிநாடுகளிலிருந்து, விதவிதமான மெஷின்களை இறக்குமதி செய்யச் சொல்கிறார்கள். இவையெல்லாவற்றையும் வழங்கிய பிறகு, இட்லி மாவு அரைக்கும் இயந்திரம் உருவாகி, சந்தைக்கு வருகிறது. அந்த இயந்திரத்தை வாங்கி, உபயோகப்படுத்தும்போது, ஊறவைத்த உளுந்தையும், அரிசியையும் போட்டு, அரைத்து எடுப்பதற்குள், இட்லி, தோசை சாப்பிடும் ஆசையே போய்விடுகிறது. அந்த அரைத்த மாவு, நாலாபுறமும், சிதறி தெறித்து, ஒட்டியிருப்பதை சுத்தம் செய்து எடுப்பதென்பது, பெரும் தொல்லையாக இருக்கின்றது. அந்தக்காலத்தில், எங்கப்பத்தா, வெகு சுலபமாக, பாட்டுப்பாடிக்கொண்டே, ஆட்டுக்கல்லில் அரைத்தெடுத்திடுவாங்க.

    ஆனால், இங்கு, என்னவொரு அற்புதமான பொறியியல் முன்னேற்றம். அந்த வேலை நடக்குமிடம், நம்ம ஊர் லேத் பட்டறை அல்லது தெருவோர சைக்கிள் கடை மாதிரித்தான் இருக்கு. ஆனால், அதிலிருந்து வெளிவரும் இயந்திரம், ஏதோ, ஜெனரல் மோட்டார்ஸ் அல்லது மெர்ஸிடிஸ் அல்லது போயிங் போன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் இயந்திரங்களுக்கு இணையாக இருக்கின்றது. அற்புதமான பொறியியல் திறமை இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகும்.

    இந்த இயந்திரங்களைப் பார்க்கும்போது, இதனை உருவாக்கியவர்களின், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்று எல்லா திறமைகளையும் சிறப்பாக உணரமுடிகின்றது. அதையும்தவிர, தலைமைப்பண்பு, மேலாண்மை எல்லாம் சிறப்பாக இருந்தால்தால்தான், இந்தமாதிரி சவாலான புராஜெக்டை எல்லாம், சிறப்பாக செயலாற்ற முடியும்.

    நம்ம ஊர் பொறியியல் வல்லுனர்களிடம், ஒரு சவாலான புராஜெக்டை கொடுத்தால், அதையெல்லாம், ஏன் நிறைவேற்ற முடியாதென்பதற்கு, ஆயிரத்தெட்டு காரணங்களை பட்டியலிட்டு சொல்வார்கள். இதெல்லாம், வெள்ளைக்காரங்களாலேதான் முடியும்; நம்மால் முடியாது என்பார்கள். கம்ப்யூட்டர் துறையே எடுத்துக் கொள்ளுங்கள்; இந்தியர்களின் உழைப்பால் உருவானாதுதான் உலகில் உள்ள் அனைத்து சாப்ட்வேர் சாதனங்கள்; ஆனால், இந்தியாவின் பெயர் சொல்வதுபோல், இதுவரை ஒன்றும் பிரமாதமாக வெளிவரவில்லை.

    நம்ம ஆட்கள், ஸ்லெம் டாக் போல் உழைப்பார்கள்; உழைக்க மட்டும்தான் தெரியும்; பெரிய சவாலை எதிர்கொண்டு, பெயர் சொல்வதுபோல் ஒன்றை உருவாக்க முடியாது; ஆக, நம்ம ஆட்கள், ஸ்லெம் டாக் போல் உழைத்து, பில் கேட்ஸ் போன்று, நிறைய மில்லியனர்களையும், பில்லியனர்களையும் உருவாக்குவார்கள்.

    அதையெல்லாம் பார்க்கின்றபோது, பிராபகரனும், மற்றும் அவரது குழுவினர்களும், ஒரு வசதியும் இல்லாத சூழ்நிலையிலும், நிறைய சாதனைகளை, சாதித்தி இருக்கின்றார்கள். இன்றைக்கு, இந்த இயந்திரம், இலங்கையில் நடைபெறும் பொருட்காட்சியில், காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருக்கின்றது. அதனை பார்ப்பவர்கள், ஆச்சரியமும், வியப்பும் அடைகின்றார்கள். இந்த திறமைகளையெல்லாம், ஆக்க வழியில் செலுத்தியிருந்தால், உலகப் புகழ் அடைந்திருக்கலாம்.

    பிரபாகரனுக்கும், மற்ற அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் ஒத்துப்போகவே முடியாது. பிரபாகரன், தலைமைப்பண்பு கொண்ட தலைவர்; அரசியல்வாதிகள், தலைமைப்பண்பு இல்லாதவர்கள்.

    தலைமைப்பண்பு என்றால், சாதரண மனிதனையும், பெரிய சாதனைகளை செய்ய வைக்கும் பண்பு. தற்கொலை என்பதை தவிர்த்துப் பார்த்தால், சாதரண மனிதர்களைக் கொண்டு, இந்த சிறப்பான இயந்திரங்கள் உருவாக்கியது; சாதரண மனிதர்களை, விமானம் ஓட்டச் செய்தது என்று பல அற்புதங்களை, சாதனைகளை, சாதிக்க வைத்திருக்கின்றார்.

    தலைமைப்பண்பு இல்லாத அரசியல்வாதிகள், யாரையும் வளரவிடுவதில்லை. அடிமைகளை மட்டும், அருகில் வைத்துக் கொண்டு, வளராமல் பார்த்துக் கொள்வார்கள்.

    ஒரு பழைய வீடியோவில், பிரபாகரன், டில்லியில், இராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு இருக்கின்றார். அப்பொழுது, அந்த இராணுவ அதிகாரி சொல்கிறார்: உனக்கு நல்லதோர் குடும்பம் அமைந்திருக்கின்றது. அழகான இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். எல்லாவித வசதிகளும் செய்து தருகின்றோம், என்று பேசுகிறார்.

    அது, இந்தியாவுக்கே உள்ள இலஞ்சம் கொடுத்து, ஆளை சரிகட்டும் பழக்கம். அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்டுவிட்டு, பிரபாகரன் சொல்கிறார்: ஏறக்குறைய, நானும் உங்களைப்போல், ஒரு இராணுவ வீரன். இராணுவத்தில் இருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு, எடுத்துக் கொண்ட இலட்ச்சியம்தான் முக்கியம். மற்றவைகள் எல்லாம், அதற்கு அப்பால்தான், அப்படி என்று எடுத்துச் சொல்லி, அந்த இராணுவ அதிகாரியையே, தேச தொண்டை ஆற்றுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்.

    மக்களின் மனதில் இடம் பெறுவதென்பது, அத்தனை சுலபமான காரியம் அல்ல. பிரபாகரன், அவர்களது மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்திருக்கின்றார். அந்த மக்களும், அவர் செய்த நல்ல காரியங்கள், தவறான முடிவுகள் என்று எல்லா உண்மைகளையும் நன்கு அறிவார்கள். கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, பிரபாகரன் சிறந்த தலைவனாகவே, எல்லோரது மனதிலும் இடம் பிடிக்கின்றார்.