ஆயிரம் காலத்துப் பயிர்
  • Indian Marriage February 05, 2009

    ஆயிரம் பொய்யை சொல்லாமல், திருமணத்தின் உண்மையை அறிந்து, கலாசாரத்தின் மதிப்பினை உணர்ந்து, இன்றைய தலைமுறையினரின் முன்னிலையில், பொறுப்புணர்வுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கும், பொண்ணு மாப்பிள்ளைக்கு, வாழ்த்துக்கள்.

    கலாசாரம் என்பது, அப்படியே நிலையாக இருக்கும் பொருள் அல்ல. இன்றைய தலைமுறை, நாளைய தலைமுறைக்கு வழங்கும்போதுதான், கலாசாரம் வாழும். இன்றைய தலைமுறை, பொறுப்புணர்வுடன், நாளைய தலைமுறைக்கு கலாசாரத்தின் மதிப்பை, உண்மையை எடுத்துச் சொல்லாமல்விடும்போது, அந்த கலாசாரம் அழிவை நோக்கி செல்கின்றது.

    இன்றைய காலக்கட்டத்தில், கல்யாணம் என்பது ஒரு சடங்கு, என்ற நிலையில் இருக்கின்றது. ஒரு கல்யாண மண்டபத்துக்கு சென்று, அங்கு நடைபெறும் உரையாடலை கேட்போமானால்...

    “ஏண்டீ, மொகத்தை தூக்கி வைச்சிருக்கிறே; உனக்கு என்ன சோகம்?” கணவன் கேட்க,
    அதற்கு மணைவி, “ஆனாலும், எங்க அண்ணனை, கல்யாணத்து அழைக்க மாட்டேங்கிறீங்க,”
    “என்னை மதிக்காதவங்களை, நானும் மதிக்க மாட்டேன்,” என்றான் கணவன்.

    “ஏங்க, உங்க சித்தப்பா வீட்டிலேயிருந்து இன்னும் வரலே, பத்திரிக்கை வச்சீங்களே,”
    “ஆமா, அவருக்கு குடும்பத்தோட சென்று, சுருள் வைச்சு, நேரிலே அழைக்கலையாம், கோபமாம்.”

    “என்ன சம்பந்தி; சாப்பாட்டுக்கு நான் முழுபணம் கொடுத்தேனே; நீங்க இலையிலே, இரண்டு சுவீட்டு வைக்கிறேன்னு சொல்லிட்டு, இப்ப வெறும் திருநெல்வேலி அல்வா மட்டும் வைக்கிறீங்களே, இது நல்லதா படலை; என்னை என் சொந்தங்களின் மத்தியில், அவமானப் படுத்தீட்டீங்க.”

    “பொண்ணுக்கு வைரநெக்லஸ் போடுவோம் என்று வாக்குகொடுத்துவிட்டு, இப்ப ஏமாத்திட்டீங்களே, இதை நாங்க சும்மா விடப்போவதில்லை.”

    “முதலிரவு எங்க வீட்லேதான் நடக்கணும். எங்க வீட்டு கட்டில் ராசியானது.”

    “மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குத்தான், முதல் பந்தி. அவுங்க சாப்பிட்டு முடிந்தபிறகுதான், பொண்ணு வீட்டுக்காரங்க சாப்பிடணும்.”

    “சாப்பிட்டவங்க எல்லாம், இங்கேவந்து மொய் எழுதுங்க.”

    இந்தமாதிரியான வசனங்களோடு, ஒரு சடங்காகத்தான், இன்றைய காலக்கட்டத்தில் கல்யாணம் நடக்கின்றது. கல்யாணத்தின்போது, இவ்வளவு பேச்சு வார்த்தைகள் நடந்தேறியிருக்கு என்று, அந்த மணமக்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது. கல்யாணமாகி மூண்று வருடங்கள் கழித்துதான், அவர்களுக்கு தெரியவந்து, அதன் அடிப்படையில் குடும்பத்தில் சண்டை, சச்சரவு, குழப்பம் ஆரம்பமாகின்றது.

    இப்படித்தான், கூட வேலை பார்க்கும் நண்பர் ஒருவர், அவரது கதையைச் சொன்னார். மூன்று ஆண்டுகள், ஆனந்தமாக இல்லறம் இருந்தது. அதன்பிறகு, சிறிய வாக்குவாதத்தில், மணைவி சொல்றாங்க, “நான் ஒன்னும் சும்மா வரலை. ரொக்கமா ஒரு இலட்சம் வரதட்சணை, எங்கப்பா கொடுத்தாங்க.”

    அந்த நண்பருக்கு அதுவரைக்கும் தெரியாது; தன் தாய்தந்தையர், வரதட்சணை வாங்கி இருக்கிறார்கள் என்று; ஆனாலும், அவரால், தன் தாய்தந்தையரை விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை; ஆக, வாக்குவாதம் தொடர்கிறது.

    “ஏண்டீ, ஒரு இலட்சத்தை பெருசா சொல்றே; மூணு லெட்சம் செலவு செய்து, உன்னை, நான் அமெரிக்காவுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன். அதைத்தவிர, உன் தம்பிக்கு வேலைவாங்கி தந்தேன்,” என்று வாக்குவாதம் தொடர்ந்து, விவாகரத்தில் முடிந்து விட்டது.

    ஆக, இன்றைய காலக்கட்டத்தில், இல்லறத்தின் மதிப்பை, உண்மையை, தேவையை அறியாமல், ஒரு சடங்குபோல் நடக்கின்றது, கல்யாணம்.

    அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆயிரம் பொய்யை சொல்லாமல், திருமணத்தின் உண்மையை அறிந்து, கலாசாரத்தின் மதிப்பினை உணர்ந்து, இன்றைய தலைமுறையினரின் முன்னிலையில், பொறுப்புணர்வுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கும், பொண்ணு மாப்பிள்ளைக்கு, வாழ்த்துக்கள்.

    பதினாறு பேறு பெற்று, பெரு வாழ்வு வாழ, நாமெல்லோரும் வாழ்த்துவோம். இன்னும் சில ஆண்டுகளில், இந்த பொண்ணுவின் இடுப்பில் ஒரு குழந்தை, அந்த மாப்பிள்ளையின் தோளில் ஒரு குழந்தை என்று காட்சியளிக்கும்போது, கலாசாரம் வாழும்.