இலங்கை குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை.
  • All citizens are Equal in Sri Lanka இலங்கை மண்ணில் பிறந்த அனைவரும் இலங்கை குடிமக்கள். குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை என்பது அடிப்படை மனித உரிமை.

    நமது இளையதலைமுறையினர் வேலைக்காக அமெரிக்காவுக்கு வருகின்றனர். அவர்களுக்கு குழந்தை பிறக்கின்றது. அமெரிக்க மண்ணில் பிறப்பதால், அந்த குழந்தை அமெரிக்க குடிமகள் ஆகின்றாள். அந்த குழந்தைக்கு, அமெரிக்கர்களின் அனைத்து உரிமைகளும் வழங்கப்படுகிறது. பெற்றோர்களுக்குகூட அந்த அளவு உரிமை கிடையாது. ஆனால் அந்த குழந்தைகளுக்கு, முழு உரிமை கிடைக்கின்றது. பிற்காலத்தில், அந்தக் குழந்தை, அமெரிக்க ஜனாதிபதியாககூட வாய்ப்பு உண்டு. அந்த வழியில்தான், ஒபாமாகூட ஜனாதிபதியாகியிருக்கின்றார்.

    அதுபோலப் பார்த்தால், இலங்கை மண்ணில் பிறந்த அனைத்து மக்களும், இலங்கை குடிமக்களே. குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை என்பது, அடிப்படை மனித உரிமை.

    இந்த பிரச்சனையை தமிழர்கள் வாழும் பகுதிக்கு சுயாட்சி என்றெல்லாம் அணுகக்கூடாது. அனைவரும் இலங்கை குடிமக்கள். குடிமக்கள் அனைவரும் சமம் என்ற முறையில்தான் அணுக வேண்டும்.

    இது ரொம்ப அநியாயமாக இருக்கு. இப்படி தான் பிறந்த நாட்டிலே, தான் அடிமையாக வாழ்வது. சம உரிமை இல்லையென்றால், அடிமை என்பதுதான் உண்மை.

    இதெல்லாம் தமிழ், சிங்களம் என்று மொழியை அடிப்படையாக வைத்துக் கொண்டு தீர்வு காண்பதோ, அல்லது புத்தமதம், இந்து மதம், இஸ்லாமியம் என்று மதத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதோ சரியான முறையல்ல.

    பூவுலகில் வாழும் மனித இனத்துக்கு, அடிமைத்தனத்தை நீக்கி, விடுதலை வாங்கித்தருவது உலகில் வாழும் மனிதர்கள் அனைவரது கடமையாகும்.

    இலங்கையில், தமிழர்கள் கை ஓங்கி, அவர்கள் சிங்களவர்களுக்கு சம உரிமை அளிக்காமல், அடிமைகளாக நடத்துவார்களேயானால், அதனையும் கட்டாயமாக தட்டிக்கேட்க வேண்டும்.

    குடிமக்களுக்கு சம உரிமை - அடிப்படை மனித உரிமை.

    நமக்கு எல்லாவித உரிமையும் உண்டு. இன்றைக்கு காந்தி உயிரோடு இருந்தால், என்ன செய்து இருப்பார். நிச்சயம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார். காந்தி என்ன செய்வாரோ, அதனை நாம் இன்று செய்ய வேண்டும்.

    காந்தி தாத்தா, இந்தியாவுக்கும் மட்டும் தேசத்தந்தை அல்ல. இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா மற்றும் சிலோன் - அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரம் வாங்கித் தந்தது, காந்தி தாத்தா. காந்தி இல்லாட்டி, சிலோன் சுதந்திரம் அடைந்திருக்காது.

    புத்தரும், நம்ம இந்தியாவிலே பிறந்தவர்தான். புத்தர் இன்றைக்கு உயிரோடு இருந்தா, வேடிக்கையா பார்த்துக் கொண்டு இருப்பார். புத்தர் உயிரோடு இருந்தா, என்ன செய்வாரோ, அதனை நாம் இன்று செய்ய வேண்டும்.

    சுதந்திரம், விடுதலை, சம உரிமை - அதெல்லாம் எல்லோருக்கும் புரிவதில்லை.

    பொதுவாக, விடுதலை எதற்கு; தங்க கூண்டு சிறை தானே; வேளாவேளைக்கு சாப்பாடு; ஆக, இப்படியே வாழ்க்கையை அடிமையாக கழித்துவிட வேண்டியதுதானே; இதிலென்ன சிரமம் என்று எண்ணுவார்கள்.

    அப்படிப்பட்ட அடிமைகள்தான் அதிகம். ஆதலால்தான் பாரதியார் பாடினான்:

    என்று தணியும், இந்த சுதந்திர தாகம்; என்று மறையும் இந்த அடிமையின் மோகம்.

    இலங்கை அதிபர் ராஜபக்சே, இப்பொழுது போர் நிறுத்தம் அறிவித்து இருக்கின்றார். இது ஒரு நல்ல செய்தி. இந்த நேரத்தில், ராஜபக்சே, தனிமையில், அமைதியாக அமர்ந்து சிந்திக்க வேண்டும்.

    தனிமை என்றால், முழு தனிமை.

    தம்பி, தளபதி, மந்திரிகள், அதிகாரிகள் - யாரும் இல்லாத தனிமை.

    அந்த தனிமையில் அமைதியாக சிந்தித்து, ஆழமாக சிந்தித்து, அமைதியாக முடிவெடுக்க வேண்டும்.

    இந்த தனிமை; இந்த சுயசிந்தனை; இந்த சுய முடிவு - மிக முக்கியம்.

    பத்து, பதினைந்து வருடங்கள் கழித்து வெளிவரும் வரலாற்று புத்தகத்தில் -

    இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே என்ற பகுதியில் -

    தம்பி, இராணுவ தளபதி, பிராணாப் முகர்ஜி, சோனியா, கருணா, டக்லஸ் என்று எந்தப் பெயர்களும் இடம் பெறப் போவதில்லை.

    பிற்காலத்தில்வரும் வரலாற்று புத்தகத்தில், மஹிந்தா ராஜபக்சேவை பற்றிய விசயங்கள் எப்படி வரவேண்டும் என்று சிந்தித்து, அதற்கேற்ற முடிவு எடுக்க இந்த தனிமை உதவும்.