தமிழகத்தை ஆளும் சர்தார்ஜி
  • Governor - Effective Executive of Tamilnadu State ஆளுநர். ஆளுநர் மாளிகை. ஆளுநர் உரை. இந்த பொய், மெய்பட வேண்டும். இந்த பொய், உண்மையாகிவிட்டால், இந்தியாவில், ஜனநாயகம் செழித்து, வளமுடன் வளரும்.

    திருவிளையாடல் திரைப்படத்தில்... எந்த திருவிளையாடலா?

    இது ஒரு புதிய குழப்பம்; கற்பனை வளம் குறைந்து, பழைய தலைப்புகளை, மீண்டும் உபயோகப்படுத்துதல். நல்ல வேளை, இந்தநாள்வரைக்கும், யாரும் தங்களோட புத்தகத்துக்கு, 'திருக்குறள்' என்று பெயரிட்டு வெளிவிடவில்லை. சிங்கத்துக்கு வயதாகிவிட்டதே என்று, உங்களது புதுபுத்தகத்துக்கு, 'சில நேரங்களில், சில மனிதர்கள்' என்று பெயர்வைத்து விடாதீர்கள். சிங்கம், கடித்து கொதறி துப்பிவிடும். என்ன அற்புதம் பார்த்தீங்களா: படைப்பின் பெயரைச் சொன்னால், படைப்பாளியின் பெயரைச் சொல்லத் தேவையில்லை.

    ஆமாங்க, சிவாஜி கணேசன் நடிச்ச திருவிளையாடல். புலவர் தருமி, அரசவைக்குவந்து, பொங்குதே தும்பி... என்ற பாடலை பாடுவார். அரசனுக்கு, பெண்களின் கூந்தலுக்கு, மணம், இயற்கையாகவே அமைந்ததா என்ற சந்தேகம். அதைத் தீர்த்துவைக்க, தருமி, யாரோ எழுதிக் கொடுத்த பாட்டை கொண்டுவந்து, அரசவையில் பாடுவார். அங்கே, நக்கீரன், தருமியைப் பார்த்து, பாட்டுக்கு பொருள் கேட்பார். பிறகு தருமி ஈசனோடு அரசவைக்குவந்து நெற்றிக்கண்ணை காட்டுவார். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொல்வான் நக்கீரன்.

    இவ்வளவு விசயங்கள் நடந்த மதுரை மண்ணிலிருந்து வந்தவெங்க, சும்மாவா இருப்போம். கேள்வி கேட்போம்ளே. குண்டக்க மண்டக்க கேள்வி கேட்போம்ளே.

    வாய்மையே வெல்லும் என்று சொல்லிட்டு என்னவொரு பொய்யான வழிமுறையை காலங்காலமாக பின்பற்றிவருகின்றோம். ஆளுநர் உரை. இந்த பொய், மெய்பட வேண்டும். ஆளுநர், தன்னோட மாளிகையில், சுயமாக சிந்தித்து, மக்கள் நலதிட்டங்களை எழுதிக் கொண்டுவந்து, மக்கள் பிரதிநிதிகளின் அவையில் வழங்க வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் திட்டங்களை விவாதித்து, ஒப்புதல் அளித்தவுடன், ஆளுநர், அத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

    உண்மையாகவே, திட்டங்களை செயலாக்கும் பொறுப்பை, அதிகாரத்தை, ஆளுநருக்கு வழங்கிவிட வேண்டும். அப்படி செய்தால், மக்கள் பிரதிநிதிகள் அவையில், மந்திரிகள் என்று யாரும் இல்லாத நிலை உருவாகிவிடும். பிறகு, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சமநிலைக்கு வந்துவிடுவர். சமநிலை ஏற்பட்டால், வெளிநடப்பு இருக்காது. வெளிநடப்பு ஏன் செய்கிறார்கள் என்றால், அவர் மந்திரி, தான் மந்திரி இல்லை. ஆக, இப்ப வெளிநடப்பு செய்தால்தான், நாளைக்கு மந்திரியாக வாய்ப்பு உண்டு என்பதால், வெளிநடப்பு நடக்கின்றது. ஆக, மக்கள் பிரதிநிதிகள் - மந்திரிகளாக முடியாது என்பதே தீர்வு. மக்களாட்சிக்கு மந்திரிகள் எதற்கு? தேவையேயில்லை. சிவில் சர்வீஸ் நிர்வாகிகளை வைத்து, ஆளுநர் சிறப்பான நிர்வாகம் நடத்தலாம்.

    சரி, இன்றைய காலத்தின் விசயத்தை பார்ப்போம். தனியார் மருத்துவமணைகளில், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற நிதியுதவி திட்டம். ஆளுநரை மிகவும் பாராட்டவேண்டும். இந்த லந்து போதுமா!. உண்மையிலேயே, இது மிகச்சிறந்த திட்டமாகவே திகழ்கிறது. கலைஞர், மிகுந்த பாராட்டை பெற்றுவிட்டார். நிச்சயமாக, பகைவர்களும், இந்த திட்டத்தை பொறுத்தவரையில், கலைஞரை பாராட்டுவார்கள்.

    ஆரோக்கியத்துக்கும் - பணத்துக்கும் ஒரு சிக்கலான முடிச்சு விழுந்த சமுதாயமாக இருக்கின்றது, நமது இன்றைய சமுதாயம். பணமில்லாத காரணத்தினால், உயிரை இழக்கும் நிலை என்று இருக்கின்றது. இது மிகவும் கொடூரமான நிலை. மருத்துவமணைகளையும், மருத்துவர்களையும், நாம் தருமத்துக்கு வேலை செய்ய சொல்ல முடியாது. அதேசமயத்தில், மருத்துவ தொழில், நல்ல துட்டு சம்பாதிக்கும் தொழில் என்றும் மாற்றி அமைத்துவிடக் கூடாது.

    இப்போதைக்கு மருத்துவ காப்பீடு முறைதான் சரியாக இருக்கின்றது. பணவசதி இருப்பவர்கள், மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். மாதந்தோறும் காப்பீட்டு தொகை கட்டுவதென்பது - தங்களது ஆரோக்கியத்துக்கு என்று அமைந்து விடுகிறது.

    பணவசதி இல்லாத நிலையில், அரசாங்கம் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதென்பது, சிறப்பான திட்டமாக அமைகிறது. இந்த திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்றால் - ஒரு இலட்சம் என்ற லிமிட். பணவசதி இல்லாதவங்களுக்கு, பூரண குணம் அடையும் முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்வதே, சிறந்த தீர்வாகும். தனியார் மருத்துவமணைகளில், புற்று நோய்க்கெல்லாம், பல இலட்சங்கள் செலவழிக்க வேண்டி இருக்கின்றது.

    இதைத்தவிர, நோய்நாடி, நோய்யின்முதல் நாடவேண்டும். புற்று நோய்யால் பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து, எதனால் நோய் வந்தது என்று ஆராய்ந்தறிந்து, அந்த காரணத்தை சரிசெய்ய வேண்டும். தற்பொழுது, அவ்வாறு செய்யாததால், அடுத்தடுத்து பலர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அரசாங்கத்துக்கு நிறைய வேலை இருக்கு. ஆனால், நாம அந்த வேலையெல்லாம் செய்யாமல், தினசரி அரசியல் மட்டுமே நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.

    இறுதியாக, ஜார்ஜ் புஷ் சொல்கிறார்: நான் எடுத்த முடிவுகள், தினசரி பத்திரிக்கைகளின் தலைப்புக்காக எடுத்தவையல்ல; வரலாற்று பொத்தகங்களில் இடம்பெறும்படி எடுத்தவை. தலைவர்கள், தொலைநோக்குப் பார்வையோடு, தீர்க்கதரிசனத்தோடு முடிவெடுக்க வேண்டும்.

    மேலும் ஒரு செய்தி. நாளை, இந்திய அரசியலமைப்பை மாற்றி அமைக்கும் பொழுது, ஜனாதிபதி - கவர்னர் - மேயர் என்றாகும் பொழுது, அவர்களது பதவிக்காலம் இரண்டு தடவைக்குமேல் கிடையாது என்று இருக்க வேண்டும். இரண்டு தடவைக்குமேல், வகித்த பதவியையே வகிக்கும் பொழுது, மக்கள் தலைவன், மன்னனாகி விடுகிறான். மக்களாட்சி தத்துவமே அழிந்து விடுகிறது.

    ஜார்ஜ் புஷ், இப்பொழுது மீண்டும், மக்களோடு மக்களாகி விட்டார். ஒரு தலைவன், தன்னோட செயலாற்றலை நிறைவேற்ற, இரண்டு முறை போதுமான காலமே.