அவசரப்பட்டால், மனம் தெளிவடைவதில்லை.
  • Clear Vision March 20, 2009

    அதிகாலைப் பொழுது. சென்னை எக்மோர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து, ஒருவர் கையில் பெட்டி, படுக்கைகளோடு வந்து கொண்டு இருந்தார். வெளியூரிலிருந்து வருவதுபோல்தான் தெரிகின்றது.

    சிரித்த முகத்துடன் வணக்கம் என்றார். நானும் பதிலுக்கு வணக்கம் என்றேன். பஸ் இங்கே வரும்லே என்று கேட்டார். வெறுமனே வரும் என்றேன். என்ன, மெட்றாஸ் காலை வெயில் மண்டையை பொளக்கிறது என்றார். ஆமாம் என்றேன்.

    எனக்கே சங்கடமாக இருந்தது. அவர் இவ்வளவு பேசுகின்றார். நாம வெறுமனே பதில் சொல்கின்றோமே என்று. இவரைப் பார்த்தாக்க மெட்றாஸ் ஆளுமாதிரி தெரியலை. இன்னேரத்திலே, பாண்டியன் வருகின்ற நேரம். ஆக, இவரு தெக்கேயிருந்துதான் வந்திருப்பார் என்று, நாமலும் பேசுவோமே என்று பேச ஆரம்பித்தேன்.

    “பயணம் எங்கே,” என்றேன்.

    “தாயின் கருவறையில் தொடங்கி, கல்லறையில் முடியும் நீண்ட பயணம்,” என்றார்.

    வடிவேலுவின் முகம் மாதிரி என் முகம் ஆனது. வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்க. காலங்காத்தாலேயே, ஆரம்பிச்சுட்டாங்க. நிச்சயம், மரை கழண்டு, மதுரையிலிருந்துதான், பாண்டியன்லே வந்திருக்கணும், என்று முடிவு செய்துவிட்டு, வேறு திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

    அப்பொழுது, ஒரு பஸ் வந்து நின்றது. படிகளில் தொங்கி வழியும் கூட்டம். “பாரிஸ் போகுமா,” என்று கேட்டார். நானும், “போகும்,” என்றேன்.

    இவர், பெட்டிப் படுக்கையோடு, பஸ் அருகில் சென்று நின்று கொண்டு இருந்தார். படிக்கட்டில் தொங்கிக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம், கீழே இறங்கி, இவருக்கு வழிவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு இருந்தார் போல. பஸ் போய்விட்டது. மீண்டும் பழைய இடத்துக்கே வந்து நின்றார்.

    அடுத்து, ஒரு மாடி பஸ் வந்து நின்றது. அவசர அவசரமாக, அந்த பஸ்ஸில் ஏற சென்றார். “அந்த பஸ் பாரிஸ் போகாது. அது சைதாப்பேட்டை போகும் பஸ்,” என்றேன். அதற்கு அவர், “ரொம்ப நாளா மாடி பஸ்ஸில் போக வேண்டும் என்று ஆசை,” என்று சொல்லிக் கொண்டே பஸ்ஸை நோக்கிச் சென்றார்.

    மாடி பஸ்ஸை நோக்கிச் சென்றவர், பின்புறம் வந்து நின்ற பஸ்ஸைப் பார்த்துவிட்டு, “அது மாங்காடு போகுமா,” என்றார். நானும் பஸ்ஸைப் பார்த்துவிட்டு, “அது பூந்தமல்லி போகின்ற பஸ். அதிலே ஏறி, நீங்க மாங்காட்டுக்குப் போகலாம்,” என்றேன்.

    இறுதியில் இரண்டு பஸ்களையும் விட்டுப்புட்டு, மீண்டும் பழைய இடத்துக்கே வந்து நின்றார். எனக்குன்னா, எங்கேயா நீ போகணும் என்று கேட்கணும்போல் தோன்றியது. ஆனால், கேட்கப்போய், எடக்கு மொடக்கா பதில் வருமோ என்ற பயத்தில், சும்மா இருந்து விட்டேன்.

    அவராகவே, “டெல்லிக்குப் போவணும்,” என்றார்.

    அப்ப எதுக்கு, இத்தனை பஸ்களில் ஏறிக்கிட்டு இருந்தீங்க என்று கேட்கணும் என்று தோன்றியது. ஏனோ அப்படி கேட்காமல், “அவசரமாக போகணும் என்றால், மீனம்பாக்கம் போங்க; மெல்ல போகலாம் என்றால், செண்ட்ரல் போங்க என்றேன்,”

    காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலை. முதலில் சாப்பிட்டு வருகிறேன் என்று கிளம்பியவர், “நீங்க வாங்களேன், சாப்பிடலாம்,” என்றார் அன்போடு. “மிக்க நன்றி, நான் சாப்பிட்டுத்தான் பஸ்ஸுக்கு நிற்கின்றேன்,” என்றேன்.

    சாப்பிடுவதற்காக எதிர் பிளாட்பாரம் நோக்கிச் சென்றவர், நடு ரோட்டில் நின்று விட்டார். நடு ரோட்டில் நின்றுக் கொண்டு, இம்பாலா போகலாமா, வசந்த பவன் போகலாமா என்று மாறி, மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கின்றார். ரோட்டில் செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் எல்லோரும் திட்டிக் கொண்டே செல்கிறார்கள்.

    ஒருவழியாக, வசந்த பவனை நோக்கிச் சென்றார். வெகு நேரம் கழித்து, மெல்ல, மெல்ல நடந்து வந்தார். இப்பொழுது, ரோட்டை கிராஸ்பண்ணுவதற்க்கு முன்னதாக, ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் பார்த்துவிட்டு, பாதுகாப்போடு கிராஸ் செய்துவிட்டு, பஸ் நிலையத்துக்கு வருகிறார்.

    வந்தவர், என்னைப் பார்த்து மெல்ல சிரித்துவிட்டு, “என்னா நீங்க இன்னும் போகலையா. உங்க பஸ் இன்னுமா வராமல் இருக்கு. உங்களுக்கு, நான் எந்த பஸ்ஸில் ஏறி, எங்கே போகின்றேன் என்று பார்க்க ஆர்வம், அதானே,” என்றார்.

    இதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். அவரே தொடர்ந்து பேசினார், “மனம் தெளிவில்லாமல் இருக்கின்றபோது, நம் கண் முன்னால் தெரிவதெல்லாம், சரியானதாகவே இருக்கு. நெறைய சாய்ஸ் இருக்கின்றமாதிரி தெரியுது. ஆனால், அது ஒவ்வொன்றும், வெவ்வேறு திசைக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.”

    மேலும் தொடர்கிறார், “ மனம் தெளிவடைவதற்கு, நேரம் எடுக்குது. அவசரப்பட்டால், தெளிவு கிடைப்பதில்லை. வீட்லே, அடுப்பாங்கறையிலே, ஒரு சட்டியிலே, ரசம் இருக்கு. அதை ஒரு நொடியிலே, கரண்டியைப்போட்டு கலக்கினால், ரசம் குளம்புபோல் ஆகிவிடுகிறது. பிறகு, ரசம் தெளிந்ததாக மாறவேண்டுமானால், அந்த சட்டியை, ஆடாமல், அசைக்காமல் அப்படியே சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டி இருக்குலே. அவசரப்பட்டால், ரசம் தெளிவாகுமா.”

    ஆக, அவசரப்பட்டால், தெளிவு கிடைப்பதில்லை. தெளிவில்லாமல் எடுக்கும் முடிவு, பெரும்பாலும் சரியானதாக இருப்பதில்லை.

    இவருக்கு, வசந்த பவனில்போய், தனியாக அமர்ந்து, காலை உணவருந்திவிட்டு, காப்பி சாப்பிடும்போது, தெளிவு பிறந்து விட்டதுபோல்தான் தெரிகிறது.

    அப்பொழுது, ஒரு பஸ் கூட்டம் குறைவாகவே வந்து நின்றது. அந்த பஸ் அருகில் சென்று, படிக்கட்டில் ஏறிக்கொண்டே, என்னைப் பார்த்து, புன்னகை புரிந்தார். பிறகு, உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து, வருகிறேன் என்று கையசைத்தார்.

    ஆர்வத்தோடு, அந்த பஸ் எங்கே போகின்ற பஸ் என்று பார்த்தால், அண்ணா சதுக்கம் என்று இருந்தது.