அர்த்தமற்ற தேர்தல்
  • Fake Election & Results இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுயிருக்கும் புதிய சவால்.

    தேர்தல் அமைதியாக நடக்கும்.

    பூத் கேப்சரிங், கள்ள ஓட்டு கிடையாது.

    தேர்தல் சட்டதிட்டங்கள், எல்லாம் மிகவும் சரியாக கடைபிடிக்கப்படும்.

    ஆனால், தேர்தல் முடிவு - அவர்கள் முடிவு.

    யாரு யாரு ஜெயிக்கணும்; யாரு யாரு தோற்க்கணும்; அவரு எத்தணை வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கணும்; இவரு எத்தணை வாக்கு வித்தியாசத்தில் தோற்கணும்; எல்லாம் அவுங்க எடுத்த முடிவாகவே இருக்கும்.

    விருதுநகரில் காமராஜர் ஜெயிக்கிறதா, தோற்கிறதா முடிவு பண்றது அவுங்க.

    விருதுநகரில் கோபால்சாமி ஜெயிக்கிறதா, தோற்கிறதா முடிவு பண்றதும் அவுங்கதான்.

    சென்னையில், பாண்டியன் ஜெயிக்கிறதா, தோற்கிறதா - அவர்கள் எடுக்கும் முடிவு.

    தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் ஜெயிப்பது; எந்த எந்த தொகுதிகளில் ஜெயிப்பது; மதுரையில் இத்தனை ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்று அவர்களால் மட்டுமே, தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும்.

    இதுக்கு எதுக்கு வீணாக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, துணை இராணுவம் எல்லாம் அழைத்துவந்து தேர்தல் நடத்த வேண்டும். அவசியமேயில்லை.

    இந்தாய்யா நரேஷ் குப்தா - இதுதான் முடிவு என்று ஒரு அறிக்கையை கொடுத்துவிட்டால், முடிந்து போயிடுச்சு, எல்லாமே சுலபமாக.

    இந்த தேர்தலுக்குப்பிறகு, மூன்று கட்சிகள், பாமக, மதிமுக, தேமுதிக காணாமல் போய்விடும் என்று சொன்னார்கள். சொன்னதை நிறைவேற்றிவிட்டார்கள்.

    ஜெயலலிதா ஒன்பது தொகுதிகளில் ஜெயித்துவிட்டோம்; செய்த பிரசாரம் வீணாகப்போய்விடவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம். அதிமுகவுக்கு ப் பத்து சீட் ஜெயித்துவிட்டுப் போகட்டும் என்பது - அவர்கள் எடுத்த முடிவு.

    தமிழகத்தைப் பொருத்தவரை, பொதுத்தேர்தல் நடத்துவதில் அர்த்தமேயில்லை.

    உலகத்திலேயே இவ்வளவு சிறப்பாக, கோல்மால், தில்லுமுல்லு யாராலேயும் சிந்திக்கவே முடியாது. புதுசு புதுசாக, புதுமையாக சிந்தித்து செயல்படுத்துகிறார்கள்.

    பொதுவாழ்வில், தன் வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணித்து, உண்மைக்காகவும், நேர்மைக்காகவும், சத்தியத்துக்காகவும், ஒருவர் வாழமுடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.

    பொதுவாழ்வில், தன் வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணித்து, பொய்க்காகவும், நேர்மைக்கு எதிராகவும், சத்தியத்துக்கு எதிராகவும் ஒருவர் வாழமுடியும் என்று உலகை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியவர், நம்ம ஊர் பெரியவர்.

    முன்பெல்லாம், கள்ள ஓட்டு, பூத் கேப்சரிங், வன்முறை என்று நடக்கும். அப்போதெல்லாம், அரசியல்வாதிகள் கெட்டவர்களாகத் தோன்றுவார்கள். மக்கள் உண்மையாகவும், சத்தியமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், இப்ப அப்படியில்லை.

    இப்ப தில்லு முல்லுவில் புதுமை.

    தேர்தல் அமைதியாக நடந்தேறியது. அரசியல்வாதிகள் மிகவும் நேர்மையானவர்களாகத் தோன்றுகிறார்கள். மக்கள் பொய்யர்களாகவும், சத்தியமற்றவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

    நேர்மையற்ற மக்கள், கை நீட்டி வாங்கிய காசுக்கு ஓட்டுப்போடுகிறார்கள். சத்தியம் தவறிய மக்கள், தின்ன பிரியாணிக்கு ஓட்டுப் போடுகிறார்கள். உழைத்து சம்பாதிக்காமல், அரசாங்கத்திடமிருந்து வாங்கிய ஓசிப் பொருளுக்கு ஓட்டுப் போடுகிறார்கள்.

    உண்மையான, நேர்மையான தலைவர்கள் - உண்மையான, சத்தியமான மக்களை உருவாக்குவார்கள்.

    பொய்யான, போலியான தலைவர்கள் வாழும் தேசத்தில், மக்களும், நேர்மையற்றவர்களாகவே மாறிவிடுவார்கள்.

    தேர்தல் முடிவென்பது மக்கள் முடிவு. ஆக அந்த மக்களையே நேர்மையற்றவர்களாக உருவாக்கிவிட்டால், எல்லாமே எளிதாக முடிந்து விடுகிறது. என்னவொரு கீழ்த்தரமான சிந்தனை.

    மக்களை நேர்வழியில் அழைத்துச் செல்வதுதான் கடினம். தவறான வழியில், மக்கள் எளிதில் சென்று விடுவார்கள்.

    மக்கள் உணரவேண்டும். எது சரி, எது தவறு என்று.

    எந்தக்காலத்தில் மக்கள் உணர்ந்தார்கள்? சுதந்திரம் சரியா அல்லது அடிமைத்தனம் தவறா என்று அறியும் நிலையிலா இருந்தார்கள் மக்கள்.

    அப்படி இருந்திருந்தால், என்று தணியும் இந்த சுதந்திர தாகம்; என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று பாரதி ஏன் பாடி இருக்கின்றான்.

    தேசத்தில் வாழும் பெரியவர்கள் எல்லாம், இந்தியா வளர்ந்த நாடாக ஆகவேண்டும் என்று சிந்தித்து செயலாற்றுகிறார்கள். இந்தமாதிரியான தில்லுமுல்லுக்களை தாண்டி, இந்தியா எப்படி முன்னேறுவது?

    எந்தவித புதுமையும் இல்லாமல், மாற்றத்தை எதிர்பார்ப்பது - எப்படி சாத்தியமாகும்.

    புதுமை என்று பார்த்தால், ஓட்டுச் சீட்டுக்குப்பதில், பொத்தானை தட்டுகிறோம். அவ்வளவுதான், நாம் கண்ட புதுமை.

    கண்ணுதெரியாதவங்ககூட, பிரெயில் முறையில் படித்து ஓட்டுப்போடுறாங்க. கண்ணு இருக்கிறவங்க, படிப்பறிவில்லாதவர்கள்போல், சின்னத்தைப் பார்த்து ஓட்டுப் போடுறாங்க.

    தேர்தல் சின்னத்தை நீக்கினால் - அது புதுமை.

    அப்புறம், அந்த விரலில் வைக்கும் மை.

    அதெப்படி சாத்தியம். ஒருத்தர்கூட கேட்க மாட்டீங்களா? எதுக்கு ஏன் கை விரலில் மை வைக்கிறீங்க என்று. கேள்வியே கேட்காத சமுதாயம், இன்றைக்கு உருவாகியிருக்கு.

    அந்த மை எதுக்கு உங்க கை விரலில் வைக்கிறாங்க என்ற உண்மையை உணர்ந்தால், அதைப் பெருமையாக, விரலை நீட்டிக்காட்டி, போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்க மாட்டீங்க.

    அந்த விரல் மை, நரேஷ் குப்தா, உங்களுக்கு வழங்கும் நற்சான்று என்று நினைத்து விட்டீர்கள். அது உண்மை அல்ல. நரேஷ் குப்தாவுக்கு, உங்கள்மேல் நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கையின்மையால், உங்கள் விரலில் மையை வைக்கின்றார். நீங்க ஒரு தடவை ஓட்டுப்போட்டுவிட்டீர்கள். நீங்க திரும்பவந்து, மீண்டும் ஒரு முறைவந்து ஓட்டுப்போட்டுவிடக்கூடாது என்பதற்காக வைக்கும் மை அது.

    அந்த மை வைப்பது - குடிமக்கள் பொய்யர்கள் என்று அர்த்தம்.

    தேர்தலில், அந்த மை வைக்காத நிலை ஏற்படுவது - புதுமை. எங்கள் மக்கள், ஒரு தடவை ஓட்டுப்போட்டால், மீண்டும்வந்து, கள்ள ஓட்டுப் போட மாட்டார்கள். ஆக, அவர்களுக்கு விரலில் மை வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்ற நிலை வர வேண்டும்.

    இத்தனை தொல்லைகள் எல்லாம் தேவையற்றது. ஒரு மாற்றம். ஒரே மாற்றம். எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும். மக்களாட்சி சிறந்து விளங்கும். ஜனநாயகம் தலைக்கும்.

    மாநில முதலமைச்சரோ; தேசத்தின் பிரதம மந்திரியோ மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் நிலைவரவேண்டும். எல்லாமே சிறப்பாக மாறிவிடும்.

    மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பது - புதுமையிலும் புதுமை.
    அதைத்தவிர வேறு வழியேயில்லை.
    அதுவரை, பழமையின் கோல்மால் தொடரும்.