சத்தியம் - சாமர்த்தியம்
  • Sumathi Passport சென்ற ஏப்ரல் மாதம் பதினான்கு நாளில், ஐயா சாலோமன் பாப்பையா அவர்கள் தலைமையில், ஒரு பட்டி மன்றம் தொலைக்காட்சியில் நடந்தது.

    பட்டி மன்றத்தின் தலைப்பு, சத்தியமா - சாமார்த்தியமா .

    இந்த பட்டி மன்றத்தின் இறுதி தீர்ப்பு: சத்தியம் காக்கப்படுகிறது, சாமார்த்தியமாக.

    தெளிவான தீர்ப்பாக இல்லை. மக்கள், சத்தியத்தை கடைப்பிடிக்க வேண்டுமா, இல்லை சாமார்த்தியமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமா - தெளிவு இல்லை.

    தீர்ப்பு சொல்லும்போது, ஐயா சாலோமன் பாப்பையா அவர்கள் சொன்னார்கள்.

    உண்மை, வாய்மை, மெய்மை. மூன்றுமே சத்தியம்தான்; உண்மை என்பது உள்ளத்தில் உறங்கிக் கிடக்கும் சத்தியம்; வாய்மை என்பது வாயின் வழியாக சொல்லப்படும் சத்தியம்; மெய்மை என்பது உடம்பின் வெளியே வாழும் சத்தியம்.

    இந்தப் பட்டி மன்றத்தின் சிறப்பு பேச்சாளர்கள்,
    பாரதி பாஸ்கர் - சத்தியத்துக்காகவும்; ராஜா - சாமார்த்தியத்துக்காகவும் பேசினார்கள்.
  • Sumathi Passport பாரதி பாஸ்கர் பேசியது. என்னோட எட்டு வயது பெண், ஒரு கண்ணன் படத்தினை மிகவும் ஆசையாக, பத்திரமாக வைத்திருந்தாள். பக்கத்து வீட்டில் இருக்கும், பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கும் இன்னொரு குழந்தை, எங்க வீட்டுக்குவந்து, என்னோட பெண்ணோடு விளையாடிக் கொண்டு இருந்தது. நான் அடுப்பறையில் வேலை செய்துக் கொண்டு இருந்தேன்.

    அப்பொழுது, அடுத்த வீட்டுப் பெண், என் குழந்தையிடம் கேட்டாள், “நான் ஒரு பொருளைக் கேட்டால், அதை நீ தருவாயா,” என்று கேட்டாள். அதற்கு என் குழந்தை, “எந்த பொருள் என்று சொல், என்னால் முடிந்தால், நான் தருகிறேன்,” என்றாள்.

    அதற்கு, அந்த அடுத்த வீட்டுப் பெண், “நீ சத்தியமாக தருவேன் என்று சத்தியம் பண்ணிக் கொடுத்தால்தான், நான் அந்த பொருள் என்னவென்று சொல்வேன்,” என்கிறாள்.

    என்னோட பெண்ணும், “சரி, சத்தியமாக, நான் தருவேன்,” என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டாள். அடுப்பறையில் இருந்துக் கொண்டே, இந்த பேச்சினை, பாரதி பாஸ்கர் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்.

    “நீ, ஆசையாக வைத்திருக்கும், அந்த கண்ணன் படத்தினை எனக்கு தரவேண்டும்,” என்றாள், அந்த பக்கத்து வீட்டுச் சிறுமி.

    சத்தியம் செய்து கொடுத்து விட்டதால், என் பொண்ணும், அந்த கண்ணன் படத்தினை, அவளது தோழிக்கு கொடுத்து விட்டாள், என்றார் பாரதி பாஸ்கர்.

    மேலும், ஆக, சிறு வயதினிலே, அந்த பக்கத்து வீட்டுச் சிறுமி, சாமர்த்தியமாக என் பொண்ணை ஏமாற்றி, முதலிலேயே சத்தியம் செய்யச் சொல்லி வாங்கிவிட்டு, அவள் ஆசையாய் வைத்திருந்த அந்தப் படத்தினை வாங்கிச் சென்று விட்டாள், அந்தப் பெண்.

    செய்த சத்தியத்துக்காக, தான் ஆசைப்பட்டு வைத்திருந்த பொருளை, எடுத்துக் கொடுத்து விட்டாள், என் பொண்ணு, என்று பெருமை அடைந்தார், அந்த தாய்.

    அடுத்து பேசவந்த ராஜா, ஆக, பக்கத்து வீட்டுப் பெண் சாமர்த்தியம் வெற்றியடைந்திருக்கு. இனி உங்க பொண்ணு, யாராவது சத்தியம் செய்யச் சொன்னா, தயங்குவாள். ஆக, உங்க பொண்ணு, சத்தியத்தை கைவிட்டுவிட்டு , இனி சாமர்த்தியத்தை கற்றுக் கொண்டு விடுவாள்.

    ஆக, இன்றைய காலக்கட்டத்தில், இந்த உலகில் வாழ்வதற்கு, சத்தியத்தைவிட, சாமர்த்தியமே தேவை என்று வாதம் செய்தார், ராஜா.
  • Sumathi Passport இருபது, முப்பது வருடங்களுக்கு பின்னால் சென்று பார்ப்போம். 1970 அல்லது 1980களில், மதுரையில் நடந்திருக்கும் இந்த நிகழ்ச்சி.

    தெருமுனையில், பெட்டிக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும் இளைஞர்கள். வில்ஸ் பில்டர் வாங்கி, பத்தவைத்து, முதல் தம் - ஆனந்தமாக, அனுபவித்து புகையினை இழுத்து, வாயில் வழியாக வெளிவிட்டுக் கொண்டு இருக்கும்போது...

    டபக்கென்று சிகரெட்டை தரையினில் போட்டு, அணைத்துவிட்டு, கடலை மிட்டாயை வாயில்போட்டுக் கொண்டு அமர்ந்து விட்டான், அந்த இளைஞன், அவசரமாக.

    அருகிலிருந்த நண்பர்கள் கத்த, “ஏண்டா, உனக்கு கிறுக்கா பிடிச்சு இருக்கு. இப்படி பில்டர் சிகரெட்டை வீணாக்கிட்டேயே,” என்றார்கள். அதற்கு அந்த இளைஞன், “ஜெகதீசன் மாமா சைக்கிளில் வந்துக்கிட்டு இருக்கார்,” என்றான்.

    அதற்குள் ஜெகதீசன் மாமா பெட்டிக்கடைக்கே வந்துட்டார். “என்னடா மாப்பிளே, இங்க உட்கார்ந்து இருக்கே. வா, வீட்டுக்குப் போகலாம்,” என்று சைக்கிளில் பின் இருக்கையில் அமரச் சொல்லி, வீடு நோக்கிச் செல்கிறார், ஜெகதீசன் மாமா.

    வீட்டை நெருங்கியதும், ஜெகதீசன் மாமா, சைக்கிளிலிருந்து குதித்துவிட்டு, சைக்கிளை ஒரு எத்து எத்துகிறார். இளைஞன் தடுமாறுகிறான். சட்டையைப் பிடிச்சு தூக்கி, இளைஞனுக்கு பொடனியிலே பளார் என்று ஒரு அடி. “அம்மா,” என்று கத்திக்கொண்டே வீட்டு வாசலில்போய் விழுகின்றான் இளைஞன்.

    வீட்டினுள்ளிருந்து பதறி அடிச்சுக் கொண்டு வெளியே ஓடிவருகிறாள் அம்மா. தான் பெற்ற பிள்ளை, தரையில் விழுந்து கிடக்கின்றான். அருகில், வேட்டியை தூக்கிக்கட்டி, வேர்க்க விறுவிறுக்க ஜெகதீசன் மாமா நிற்கின்றார்.

    தாய், தன் மகனை தூக்காமல், ஜெகதீசன் மாமா அருகில் சென்று, “என்ன தம்பீ தப்பு செய்தான், என் மவன்,” என்று கேட்கிறாள். அதற்கு ஜெகதீசன், “ஐயா, தம் அடிச்சிக்கிட்டு இருந்தாரு, அக்கா, ” என்று சொல்ல, தாயும் சேர்ந்து நாலு சாத்து சாத்துகிறாள்.

    இத்தனைக்கும், ஜெகதீசன் மாமா, உறவு சொந்தமெல்லாம் கிடையாது. பக்கத்து வீட்டிலே வசிப்பவர்கள். அது அத்தனை பொறுப்புள்ள சமுதாயம்.

    அமெரிக்கா, ஐரோப்பாவெல்லாம் - வளர்ந்த நாடுகள் என்று சொல்றாங்க. ஆனால், உண்மையிலேயே, முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மதுரையை போன்ற ஊரு, அங்க வாழ்ந்த மனிதர்கள் - அவெங்கதாங்க வளர்ந்த, முன்னேறின சமுதாயம்.

    நம்ம பொண்ணு, சத்தியம் காத்த பொண்ணு என்று பெருமைபட வேண்டும். அதே சமயம், அந்த பக்கத்து வீட்டுப் பொண்ணு செய்த செயல் - சரியான செயல் அல்ல. அதுவும், அந்த இளம் வயதில், அப்படி ஏமாற்றுவது - சாமர்த்தியம் என்று வெறும் பேச்சு பேசிவிட்டு பெரியவங்க போய்விடக்கூடாது.

    தவறு செய்த பொண்ணும் - சின்ன பொண்ணுதானங்க. அந்த வயசிலே, அந்த தவறை திருத்த முடியாதா என்ன? ஐந்தில் வளைச்சா வளையும்ங்க; உண்மையிலேயே, ஐம்பதிலும் வளைச்சா வளையும்ங்க. உயிருள்ள, பச்சை மரம் எல்லாம் வளைக்கலாம். செத்த விறகைத்தான் வளைக்க முடியாது.

    ஜெகதீசன் மாமா அளவுக்கு பொறுப்புணர்வோடு செயல் செய்ய முடியாவிட்டாலும், பாரதி பாஸ்கர், அடுப்பறையைவிட்டு வெளியேவந்து, அந்த சிறுமியிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உனக்கு கண்ணன் படம் வேண்டுமா, நான் வாங்கித்தருகிறேன் என்று எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

    சரி கேட்கமாட்டேங்குதா, அவுங்க தாய் தந்தையிடம் நல்ல முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும். அவுங்க கேட்கிறாங்க, கேட்கலை - அது வேற. ஆனா, எடுத்துச் சொல்ல வேண்டியது - நல்ல சமுதாயத்தின் தலையாய கடமை.

    அப்படி சின்ன வயதிலே, சாமர்த்தியமாக ஏமாற்றும் இளைய சமுதாயம்தான், பிறகு நாட்டின் தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் - சாமர்த்தியத்தை மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள்.

    சிறுவயதில், சத்தியம் தவறும்போது, திருத்த வேண்டும். அது பெரியோர்களின் பொறுப்பு.

    இன்றைய காலக்கட்டத்தில், சத்தியம் இரண்டு இடங்களில் செழித்து வாழ்கிறது. ஒரு இடம் - குழந்தைகள் பிறக்கும் மருத்துவமணை; மற்றவர்கள் எப்படியோ - ஆனால், அங்கு பிறக்கும் குழந்தைகள் சத்தியமாகவே வாழ்கின்றனர்.

    இரண்டாவது இடம் - தமிழக சிறைச்சாலை. நட்ராஜ், சிறைச்சாலைக்குவரும் மிருகங்களை மனிதர்களாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்.

    மற்ற இடங்கள் அனைத்தும் - பள்ளிச்சாலைகள், அரசு, வீடு, கோவில் - சத்தியம் அழிந்து கிடக்கின்றது. பொய்யும், போலித்தனமும், மனிதனை, கொடூர மிருகமாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றது.