இயற்கையில் அமைந்த உறவு, தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் உள்ள உறவு. அந்த உறவுகூட இறுதிவரை தொடர்வதில்லை. பிள்ளை, தன் சொந்தக்காலில் நிற்கும்வரைதான். தன் சொந்தக்காலில் நிற்கும் சக்தியை அடைந்தவுடன், பிள்ளையும் தாயை பிரிந்து செல்லும். இதுதான் மனித சமுதாயத்தின் வாழ்வுமுறை. மனித சமுதாயம் மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள் என்று அனைத்து உயிரினங்களின் வாழ்வு முறை இதுதான். இதுதான் இயற்கை. இந்த வாழ்வுமுறை மட்டுமே இயற்கையானது. இந்த இயற்கை மட்டுமே நிலையானது; காலத்தினால் அழியாதது.
மற்ற அனைத்து உறவுகளும், செயற்கையாக உருவாக்கப்பட்டது. கணவன், மனைவி, சகோதரன், சகோதரி, கொழுந்தன், சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, நண்பன், தலைவன், தொண்டன் என்று சமுதாயத்தில், வழக்கத்தில் இருக்கும் அல்லது மறைந்து கொண்டிருக்கும் அனைத்து உறவுகளும் - செயற்கையாக உருவாக்கப்பட்ட உறவுகள். செயற்கை உறவுகள், காலத்தினால் அழிந்து போய்விடும்.