இன்றைய காலகட்டத்தில், மாநிலங்களில் இருந்து உருவாகும் தலைவர்கள், டெல்லியில் பிரதமராக எங்களால் முடியும் என்று சவால் விடும்போது, டெல்லியில் இருப்பவர்கள், மாநிலங்களுக்கு செக், தங்களாலும் வைக்க முடியும் என்று காட்ட வேண்டும். தேவைப்பட்டால், ராகுல் தமிழக முதலமைச்சர்; அவுங்க அக்கா, ஆந்திரத்துக்கு முதலமைச்சர்; அவுங்க அம்மா, சோனியா எளிதாக பிரதம மந்திரியாகக்கூட ஆகலாம். இன்றைக்கு இருக்கும் ஜனாதிபதி, சோனியா பிரதமராவதற்கு தடையாக இருக்க மாட்டார்; நல்லதா போச்சு, ஆளை விடுங்கப்பா சாமிகளா, என்று ஓட்டம் பிடித்து ஓடிவிடுவார், மன்மோகன் சிங்.
ராகுல் தமிழக முதலமைச்சர் என்றாகும்போது, தங்கபாலு உயர்கல்வித்துறை அமைச்சராகலாம்; இளங்கோவன் நிதியமைச்சராகலாம்; யசோதா அம்மையார், மின்சாரத்துறை அமைச்சராகலாம்; கார்த்தி சிதம்பரம், கம்ப்யூட்டர் துறை அமைச்சராகலாம். ராகுல் தமிழக முதலமைச்சர் என்று இல்லாத நிலையில், வேறு எப்படி குட்டிக்கரணம் போட்டாலும், பலன் இருக்காது; தொடர்ந்து, இவுங்களுக்கு அல்லது அவுங்களுக்கு என்று பல்லக்கு தூக்குவதைத்தவிர வேறு வழியில்லை.
மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி என்று இருந்தால், மக்களது திட்டங்களை எளிதாக நிறைவேற்ற ஏதுவாகும் என்று தற்பொழுது சொல்லி வருகின்றார்கள்; அப்படி சொல்வது, இந்திய அரசியலமைப்பை இழிவு படுத்தும் சொல் என்று அறியாமல் சொல்கின்றார்கள்; அவர்களின் அந்த வாக்குமூலமே, இந்திய அரசியலமைப்பில் ஓட்டை இருக்கின்றது என்று சொல்வதற்கு சமமாகும்.
ஆக, மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சி என்று அமைந்தால், தமிழக மக்களுக்கு மேலும் நன்மை பயக்கும் என்று சொன்னால், தமிழக மக்களின் ஓட்டு உங்களுக்கே; ஏனென்றால், மக்கள் அனைவரும், சுயநலவாதியாகவே உருவாகி வருகின்றார்கள். இந்தியா வளர்வதைவிட, தங்களது மாநிலம்; அல்லது தங்களது ஊர்; அல்லது தங்களது வீடு என்று மனிதனின் மனம் சுருங்கிக் கொண்டேதானே போகின்றது. ராகுல் வந்தால், பில்கேட்ஸையே கூட்டிக்கொண்டு வருவார்; தமிழகமே, மைக்ரோஸாப்ட் நிறுவனம்போல் செல்வம் செழித்துக் கொழிக்கும்.
சத்தியமூர்த்தி பவனில் இருப்பவர்கள், கனவு காணக்கூடத் தயங்குகின்றார்கள்; அத்தனை தாழ்வு மனப்பான்மை; குறைந்தபட்சம் கனவாவது காணுங்கள்; அடுத்த கட்சியினர், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டம் நடத்த வேண்டும்; மற்றவர்கள் கேட்க வேண்டும்; கொடு, கொடு, ஆட்சியில் பங்கு கொடு.
அன்னைக்கு, ஸ்ரீபெரும்புத்தூரில் கருப்பையா மூப்பனார், ஜெயந்தி நடராஜன் இவர்களைத்தவிர வேறு எந்த அரசியல்வாதியாக இருந்திருந்தாலும், கொஞ்சம் யோசித்து, நின்னு நிதானமாக காரியத்தில் ஈடுபட்டு இருந்திருப்பார்கள். சரி, நடந்தது நடந்து விட்டது; இந்த இழப்பை எப்படி ஆதாயமாக்குவது என்று கணக்கு போட்டு இருந்திருப்பார்கள். அன்னைக்கு, தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் ஏறியிருந்திருந்தால், இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ராஜீவ் காந்தியின் ஆட்சி தொடர்ந்திருக்கும், தமிழகத்தில். ஒரு வேளை, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தால், இலங்கையில் பழிவாங்கும் எண்ணம் வளர்ந்திருக்காது.
ஆக, ராகுல் தமிழக முதலமைச்சர்; ராகுல், சென்னையில் இருந்து ஆட்சி நடத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை; சிதம்பரத்தை, தமிழகத்தின் துணை முதல்வராக நியமனம் செய்தால், சிதம்பரம் பொறுப்பாக ஆட்சி செய்வார். நம்ம ஊர் மத்திய அமைச்சர்கள், பெரும்பாலும் சென்னையில் இருப்பதைப்போல், ராகுல், தமிழக முதலமைச்சராக ஆனபோதிலும், டெல்லியிலேயே இருந்து கொள்ளலாம்.