தொட்டிலுக்கு
அன்னை;
கட்டிலுக்கு
கன்னி;
பட்டினிக்கு
தீனி;
கெட்டபின்பு
ஞானி.
கண்ணதாசன் எழுதிய, வீடு வரை உறவு என்ற பாட்டில் வரும் வரிகள். மேலும், கண்ணதாசன் சொல்கிறார்: எப்படி எல்லாம் வாழக் கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே, 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை தனக்கு உண்டு.
கண்ணதாசன் புஸ்தகத்தில் மேலும் சொல்லி இருக்கின்றார்: நமது தெய்வங்களும் மனித வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத உன்னத நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. 'தெய்வத்துக்கு இணையாக எதையும் சொல்லக் கூடாது' என்று கட்டளை போடுவதில்லை. நமது தெய்வம் மனித வடிவில் இயங்கும். மனித வாழ்க்கையின் பல கூறுகளிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்.
நமது தெய்வம் காதலிக்கும்; பரவசப்படும்; போர் புரியும்; யுத்த தர்மத்தைப் போதிக்கும். நமது தெய்வம் தூது செல்லும்; அரச தர்மத்தைப் புகட்டும். காதலனையும் காதலியையும் சேர்த்து வைக்கின்ற வேலைக்குக் கூட, நமது தெய்வம் துணை புரியும். ஆகவேதான் நமது இதிகாசங்களோ, புராணங்களோ வறட்டுத்தனமாக இல்லை.
நமது இதிகாசங்களில் லெளகிகத்தின் கம்பீரம் இருக்கிறது. சுகமான காதலியின் கனவு இருக்கிறது. அவற்றில் ஒன்று இராதா-கிருஷ்ண பாவம். இந்த பாவத்தை ஒரு காமநூல் போலவே வடித்தார் ஜயதேவர். அது ஞானத்தின் முதிர்ச்சி பெற்ற நிலையாயினும் காமரசமாகவே தோற்றமளிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், ஜயதேவர் 'அஷ்டபதி கீதகோவிந்தம்' என்ற தலைப்பில் இதனை எழுதினார். ஒவ்வொன்றும் எட்டுச் சரணங்கள் கொண்ட இருபத்து நான்கு கீதங்களாக ஜயதேவர் இதனை வடித்தார்.
இதில் ஒரு வேடிக்கை. இந்த நூலைப் படித்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், 'இது ஒரு ஆபாச நூல்' என்று தடை செய்ய உத்தரவிட்டார். அதோடு ஜயதேவரைக் கைது செய்யும்படியும், ஆணை பிறந்தது. அதன் பிறகுதான் ஜயதேவர் வாழ்ந்தது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது விளக்கப்பட்டது.
ராதை, கிருஷ்ணனுக்காக ஏங்குகிறாள்; கிருஷ்ணன், ராதைக்காக ஏங்குகிறான்; தோழி ஒருத்தி தூது செல்கிறாள்; இடையில் அனைத்தும் வருணனைகள்; அவர்கள் வாழ்ந்த கதைகள். ஒவ்வொன்றும் சுவையான வருணனை. சற்று பச்சையாக இருந்தாலும் தேவ பாவத்தோடு அவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கும்போது, லெளகிக வாழ்க்கையிலும் மனிதனுக்கு இச்சை வருகிறது. நல்ல காதலன் காதலியின் இலக்கிய பாவம், கீத கோவிந்தம் முழுவதிலும் இழையோடுகிறது.
கண்ணனும் ராதையும் கலந்து விளையாடியதை, காமரஸமாகச் சித்திரிக்கும் ஜயதேவர், அதில் ஒரு ஞானரஸத்தையும் ஊட்டுகிறார். 'காமக் கலவி' என்பது ஒருவகை லயம். ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாகவே காட்சியளிப்பது அது. அது அத்வைத நிலை; சமாதி நிலை. பேசுவது சரீரங்களைப் பற்றியேயாயினும், உள்ளுணர்வு ஆன்மாவைப் பற்றியது.
இரண்டற்ற நிலையில் ஜீவராசிகள் முழுவதுமே ஒவ்வொரு கட்டத்தில் இயங்குகின்றன. அந்த லயத்தில் மானிடர்கள் ஈடுபட வேண்டுமென்று தான் இல்லறத்தை ஒரு புனித 'அறமாக' ஆக்கினார்கள், நம் முன்னோர்கள். இல்லறம் என்பது இல்லத்தில் நடத்தப்படும் அறம் என்ற அர்த்தம் ஆகும்.
பகவான், லோகாயத சுகத்தின் குருவாக ஆக்கப்படுகிறான். காமத்துக்கெனக் கூறப்படும் சாஸ்திரம், பகவான் வடிவத்தில் காட்டப்படுகிறது. வாழ்க்கையின் உச்சக்கட்ட உணர்ச்சியாக, காமம் எழுந்து நிற்கிறது. செயலின் மூலம் செயலற்ற நிலையை அடைவதே - காமம். அந்த இயக்கத்தில் மனம் ஒன்றுபட்ட பின் வேறு சிந்தனைகள் இயங்காமல் நின்று விடுகின்றன. அவனையே அவளும், அவளையே அவனும் நினைக்கிறார்கள்.
பக்தித் தத்துவத்திலும் இதுதானே நிலை! படுக்கை அறை 'பள்ளியறை' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டவன் சயனிப்பதும், 'பள்ளி' என்று கூறப்படுகிறது. உடல் உறவில் அடைகின்ற அமைதி, பக்தியிலும் கிடைக்கிறது. பக்தியில் கிடைக்கின்ற ஆனந்த நிலை உடல் உறவிலும் கிடைக்கிறது.
கோவில் கோபுரங்களில் காமரஸப் பதுமைகளை வைத்திருப்பதும், அந்த உண்மையை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே. சிவலிங்க வடிவமே, அது தானே. காரணம் உலக இயக்கத்துக்கு காமம் தேவை.
திருமணங்களின் மூலம் குடும்பங்கள் உருவாகிப் பண்பாடுகள் காக்கப்படுகின்றன. காமம், கலையாக விவரிக்கப்பட்டது. ஒவ்வொரு சிறு காரியமும், பிரமாதப்படுத்தப்பட்டன. வெறும் பார்வையே கூடக் காவியமாக்கப்பட்டது. முத்தம் இடுவது கூட வகை வகையாக விவரிக்கப்பட்டது. வீடு விட்டுக் காடு சென்ற முனிவர்களே கூட, காமத்தைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார்கள். அங்கங்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் கூடக் காவியங்களுக்கானா கருவாக அமைந்தது.
வருணனைகளைப் படிக்கும் போதே, 'வாழ்ந்து பார்க்க வேண்டும்' என்ற ஆசை கிளர்ந்தெழுமாறு காமச் சுவையே மிகைபடத் தொடங்கிற்று. ஆகவே, நோக்கம் சிருஷ்டி; அதற்கே இரண்டு கருவிகள்; அந்த இரண்டு கருவிகளைத் தூண்டிவிடும் வருணனைகள். மூலநோக்கம் சிருஷ்டி என்பதனை மனத்திலே கொண்டால், காம இன்பம் விரஸமாகத் தெரியாது. காமம், உடலுறவு - புனிதமாகிவிடும். அந்தப் புனிதமான உடலுறவை ஜயதேவர், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சுவையாக வருணித்திருக்கின்றார்.
மேலும் விவரம் அறிய, கண்ணதாசன் புஸ்தகங்களைப் படிக்கவும்.
இன்றைய செய்தி: சாமியாரின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய சி.டி செம விற்பனை. இதுதாங்க உண்மை; இதுதாங்க, நாம் அனைவரும் உருவாக்கிய ஒழுக்கங்கெட்ட, போலித்தனம் மலிந்து கிடக்கும் உளுத்துப் போன சமூகம்.
இன்றைய சம்சாரி, இல்லறத்தில் ஈடுபடுகிறான்; அதில் 'அறம்' இருப்பதில்லை; காம இன்பமும் இருப்பதில்லை; பணம், சொத்து என்று ஆணும், பெண்ணும் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள்; வாழ்க்கையை அநுபவிப்பதேயில்லை; வாழ்க்கையை பூரணமாக வாழ்வதில்லை; தான் அநுபவிக்க இயலாத காம இன்பத்தை, காவி ஆடை அணிந்தவன் அநுபவிக்கிறனே என்று, காசு கொடுத்து சி.டி. வாங்கி விநோதமாக பார்க்கும் சமூகம்.
கொஞ்சம்கூட பகுத்தறியும் திறனே இல்லாத, உண்மைக்குப் புறம்பான சமூகமாக, இன்றைய சமூகம் உருவாகிக் கொண்டு இருக்கின்றது. ஒரு மனிதன், ஒரு வித கலர் உடையை அணிந்தவுடன், அவனுக்கு எந்தவித உணர்வும் உதயமாகாது என்று, இன்றைய சமூகம் எதிர்பார்க்கின்றது. சமூகத்தின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்தவுடன், ஏமாற்றியவன் மீது சினம் கொள்கிறார்கள். அவன், மிகவும் இயல்பாக, இயற்கையாக, தனது பட்டினிக்கு தீனியும், கட்டிலுக்கு கன்னியும் அடைந்து ஆனந்த நிலையை அநுபவிக்கின்றான்.
கலர் உடை அணிந்தவுடன், மனிதனுக்கு வயிற்றுப் பசி இருக்காது; கலர் உடை அணிந்தவுடன், மனிதனுக்கு கட்டில் தேவையில்லை; கலர் உடை அணிந்தவுடன், அவனை கொசு கடிக்காது; கலர் உடை அணிந்தவுடன், அவனுக்கு தாகம் எடுக்காது; தும்மல் வராது; ஜலதோஷம், காய்ச்சல் வராது; என்று இன்றைய சமூகம் நம்புகிறது. அவன் இயல்பாக வாழுகிறான் என்று அறிந்தவுடன், இவர்களது மூட நம்பிக்கைக்கு, அவன் துரோகம் இழைத்துவிட்டான் என்று சினம் கொள்கிறது. இப்படியே போனால், இன்னும் சில வருடங்களில், அந்த சாமியார் சாப்பாடு சாப்பிடுகிறார்; தண்ணி குடிக்கின்றார்; என்று திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வெளியிடுவார்கள்; அதையும் மக்கள் ஒருவித பரபரப்புடன், காசு கொடுத்து வாங்கி பார்ப்பார்கள்.
காமம் என்பது இயற்கையான, இயல்பான உணர்வு. ஆணும், பெண்ணும் காதல் கொண்டு; காதல் கனிந்து; இயக்கத்தில் ஈடுபட்டு, காம இன்பத்தை அடைகிறார்கள். அந்த இயக்கத்தில், இருவரும் சமம் என்ற நிலையில் செயல்படுகிறார்கள். உயர்ந்தவர், அடிமை என்ற hierarchy அங்கு கிடையாது. எந்தவித எதிர்பார்ப்பும், பலனை எண்ணிக் கொண்டும், செயலில் ஈடுபடுவதில்லை. இன்பத்தைக் கொடுத்து, இன்பத்தை எடுக்கும் செயலில் இருவரும் ஈடுபடுகின்றனர். செயலின் மூலம் செயலற்ற நிலையை, இருவரும் அடைகின்றனர். அந்த இன்பத்தின் பலனாக, மழலைச் செல்வமும் கிடைக்கின்றது. குடும்பம், ஆலமரம் போல் வளருகிறது. பண்பாடு, கலாசாரம் சிறப்பாக வளருகிறது.
காமத்தின் அருமை பெருமைகளை அறிந்ததால், வள்ளுவர், காமத்துப் பாலை படைத்திருக்கின்றார். காமம் என்பது, மனிதனின் அகத்தில் இயற்கையாக உருவாகி, புறத்தில் செயலில் வெளிப்படுகின்றது. ஆபாசம் என்பது, செயற்கையாக புறத்தில் நடக்கும் செயலினால், அகத்தில் ஏக்கத்தை உருவாக்கி விடுகிறது. அந்தக்காலத்தில், சில்க் ஸுமீதா, ஆலம், ஹெலன் அவர்களின் நடனம், பார்ப்பவர்களின் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தும்.
இன்றைய காலகட்டத்தில், காமமும் இல்லை; ஆபாசமுமில்லை; இருப்பதெல்லாம் அருவருப்பே. தொலைக்காட்சிகளில் வரும் நடன போட்டிகளாகட்டும், திரைப்படங்களில் வரும் நடனங்களாகட்டும், அவைகளில் காமம் இல்லை; ஆபாசம் இல்லை; இருப்பதெல்லாம் அருவருப்பே. இன்றைய நடனத்தின் முக்கிய பாவமாக அரங்கேறுவது - தெருவில் நாய்கள், சேர்க்கையில் ஈடுபடும்போது ஏற்படுத்தும் அசைவுகளை, இவர்கள் மேடையில், நடனத்தின் முக்கிய பாவமாக அரங்கேற்றுகிறார்கள். அதிலேயும், அந்த அசைவோடு இணைந்து, ரவுடிகள், நாக்கை மடித்து கடித்துக் கொள்வதைப் போன்ற முகபாவத்தையும் காட்டுகிறார்கள். ஆக, இன்றைய கலையில் காமம் இல்லை; ஆபாசம் இல்லை; இருப்பதெல்லாம் அருவருப்பே. இன்றைய கலையைப் பார்த்தவுடன், உள்ளத்தில் ஏக்கமோ, கிளர்ச்சியோ உதயமாவதில்லை; வயிறு குமட்டி வாந்திதான் வருகிறது.
கமலஹாசன் - சில்க் ஸுமிதா இணைந்து ஆடிய நடனம் - ஆபாசம். சிறுக்கி, சிறுக்கி மக சீனா தானா - அருவருப்பு. இன்றைக்கு பல நடன மங்கைகள், சிறு குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் diaper அளவுக்கு சிற்றாடை அணிந்து கொண்டு, அதி வேகமாக நடனமாடுகின்றனர். அதிலேயும், தங்களது பெரு விரலை, அந்த diaper போன்ற உள்ளாடையில் நுழைத்து, அதையும் கிழித்து விடுவதைப் போன்று நடன அசைவுகளை அரங்கேற்றுகின்றனர். உடம்பில், சில பகுதிகளைத் தவிர, அனைத்து பரப்பினையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனாலும் மனிதன் எந்தவித இன்பமும் அடைவதில்லை; தாகம் தீர்வதுமில்லை; மேலும், மேலும் தேடுதலில் ஈடுபடுகின்றான்.
பதினாறு வயதினிலே திரைப்படத்தில், கிராமத்துக்கு படித்த டாக்டர் வந்திருப்பான். அந்த டாக்டர், ஆற்றுக்கு நடுவில் உள்ள பாறையில் அமர்ந்திருப்பான். டாக்டர்மேல் காதல் கொண்ட மயில், டாக்டரை தேடி வருவாள். அப்பொழுது, டாக்டர், மயிலிடம் ஒரு போட்டி வைப்பான். பாவாடை தண்ணீரில் நனையாமல், மயில், டாக்டர் அமர்ந்திருக்கும் பாறைக்கு வரவேண்டும். மயிலும் போட்டிக்கு ஒத்துக்கொண்டு, பாவாடை தண்ணீரில் நனையாமல், உயர்த்திப் பிடித்துக் கொண்டு, மெல்ல மெல்ல நடந்து வருவாள். சினிமா பார்த்துக் கொண்டிருந்த மக்கள், அவ்வளவு நேரம் வெறுத்துக் கொண்டிருந்த டாக்டர் கேரக்டரை, இந்த ஒரு போட்டிக்காக பாராட்டினார்கள். டாக்டரைப்போல், மக்களும் ஆவலுடன், மயில் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். பாதி ஆற்றைக் கடந்தவுடன், மயில் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டவுடன், மக்களும் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள். அந்த கலை, காதல், காமம், இன்பம் என்று மனிதனுக்கு கிளுகிளுப்பை ஊட்டிய கலை. இன்றைக்கு, நடன மங்கைகள் எதையும் மறைப்பதில்லை; ஆனாலும் மனிதனுக்கு இன்பம் அடைவதில்லை; பைத்தியம் பிடிச்சுதான் அலையும் நிலை.
தேவர் மகனில், கமலஹாசன் - ரேவதி முதலிரவு காட்சி. ரேவதி, இஞ்சி இடுப்பளகா என்று பாடத் தொடங்குவார். கமலஹாசன், கையைத் தொட்டவுடன், பாட்டு நின்னுவிடும்; காத்து தான் வரும். அதை உணர்ந்த கமலஹாசன், தன் கையை எடுத்து விடுவார். அந்த தருணத்தில், ரேவதி, பரவாயில்லை, கையை பிடிச்சுக்கோங்க என்று தனது கையை, கமலஹாசனை நோக்கி நீட்டுவார். அது காதல், இன்பம், காமம், பரவசம். இன்னைக்கு, ஒரு இழவும் தெரிய மாட்டேங்கிறது. இவன் பல்லாலே, அவ உதட்டை கடிச்சு இழுக்கிறான். அதைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குப்போய், அவசர அவசரமாக படுக்கை அறைக்கு இழுத்துட்டுபோய், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று நேரடியாக பல்லாலே, பொண்டாட்டி உதட்டை கடிச்சு இழுக்கிறான். அவ, செருப்பு பிஞ்சிடும் என்று ஓடிவந்து, விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போகிற நிலை.
அன்று, கண்ணதாசன் எழுதினான்: ஒருவரின் துடிப்பினிலே விளைவது, கவிதையடா; இருவரின் துடிப்பினிலே விளைவது, மழலையடா; ஈரெழு மொழிகளிலே எந்த மொழி, மழலை மொழி; பிள்ளை மொழி கேட்டு விட்டால், இல்லையொரு துன்பமடி.
ஜெயகாந்தன் எழுதியதைப் போல், எல்லோருமாக சேர்ந்து, கூத்தாடி, கூத்தாடி, போட்டு உடைத்துக் கொண்டு இருக்கின்றோம், நம் முன்னோர்கள், சான்றோர்கள், அறிஞர்கள் உருவாக்கிக் கொடுத்த, அருமையான தோண்டியை. நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கையிலே.
ஆக, தொட்டிலுக்கு அன்னை; கட்டிலுக்கு கன்னி; பட்டினிக்கு தீனி; கெட்டபின்பு ஞானி. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காதவன்; நல்லது கெட்டதுகளை அநுபவித்து பார்க்காதவன், ஞானியாக முடியாது. அவன் போலியாகத்தான் ஆக முடியும். முத்து திரைப்படத்தில், பெரிய பணக்காரராக வாழ்ந்த பெரியவர், பிறகு அனைத்து சொத்துக்களையும் துறந்து, பிச்சைக்காரனைப்போல், மரத்தடியில் படுத்திருக்கின்றாரே, அவர்தான் ஞானி. திரையில் மட்டும் அல்ல, நிஜத்திலும், அவர்தான் ஞானி.
எங்கேயோ ஆரம்பித்து, எங்கெங்கெல்லாம் சுற்றிவிட்டு, இறுதியில் உண்மையை எடுத்துக்காட்ட, எடுத்துக்காட்டாக வாழ்கிறன் ஒரு மனிதன் என்பதை எண்ணும்போது, ஒரு நம்பிக்கை உள்ளத்தில் பிறக்கின்றது. ஆக, நிலைமை அவ்வளவு மோசம் அடைந்திடவில்லை. சமூகத்தை, சமுதாயத்தை, மாநிலத்தை, தேசத்தை, உலகத்தை, மக்களை சீர் செய்து விடலாம் என்ற நம்பிக்கை, மேலும் உறுதியடைகிறது.