பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். பாடல்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.
கொடிகள் எல்லாம் பலவிதம். கொடிக்கு கொடி ஒருவிதம். கொண்டாட்டம் பலவிதம். நானதிலே ஒரு விதம்.
அவனா செத்தான். அவன் சாகவில்லை. சாவு அவனுக்கில்லை.
அவன் நிரந்தரமானவன்; அழிவதில்லை. எந்தநிலையிலும் அவனுக்கு மரணமில்லை.
தனது வாழ்க்கையை சலவை சோப்பு ஆக கருதி, சமுதாயத்தை அடித்து, வெளுத்து, சுத்தம் செய்து விட்டான். அவனால், சமுதாயம் மாசு அடையவில்லை.
இன்றைய சூழலில், இலஞ்சம், ஊழல், எங்கும் பெருகி பொங்கி வழிந்துக் கிடக்கின்றது. பார்க்கும் இடத்தில் எங்கும், காணப்படுவது, பிளாக் அண்ட் வொயிட்.
இலஞ்சம் என்பது அழுக்கு; அசுத்தம்; மாசு. புரையோடிக் கிடக்கும் அசுத்தம்.
அசுத்தத்தை அகற்ற வேண்டும். ஒரே சலவையில், சமுதாயத்தில் படிந்திருக்கும் கறையை நீக்கிவிட இயலாது. பல்வேறு முறைகளில், பல சலவைகளில், முற்றிலும் கறை நீங்கிவிடும்.
உடம்பில், நோய் முற்றியுள்ள நிலையில், பல தடவை, பல்வேறு முறைகளில் சிகிச்சை அளித்து, நோயை நீக்கி, ஆரோக்கிய நிலையை அடைய வேண்டும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, பிடிவாதமாக, சர்க்கரை வியாதியா; காலை வெட்டு என்று சிகிச்சை அளிக்க இயலாது.
இலஞ்சம், வீடுகளில் தொடங்கி, கல்விச்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில் என்று அனைத்து இடங்களிலும் நிரம்பி வழிகின்றது.
வீடுகளில், பிள்ளைகளுக்கு, ஒண்ணு இலஞ்சம் கொடுக்கின்றோம்; அல்லது மிரட்டி அச்சுறுத்துகின்றோம். சொன்னபடி நடந்தால், உனக்கு புது வீடியோ கேம்ஸ் வாங்கி தருகிறோம் என்ற செயல் இலஞ்சம். அல்லது, அப்பா வந்தவுடன் சொல்லி அடிக்கச் சொல்லுவேன் என்ற மிரட்டல்.
கடவுளோடு, எதுக்கெடுத்தாலும் டீல். பரீட்சையில் பாஸ் பண்ணினால், நூற்றெட்டு தேங்காய் உடைக்கிறேன்; வடை மாலை சாத்துறேன்; அனைத்தும், கடவுளுக்கு நாம் அளிக்கும் இலஞ்சம்.
ஆக, இன்றைய காலநிலையில், இலஞ்சம் என்பது வாழ்க்கையோடு பின்னிப் பினைந்து இருக்கின்றது. இதில் எந்த இலஞ்சத்தை, யார் ஒழிப்பது.
மக்களின் கருத்து வேறுபாடுகள் எல்லாம், இலஞ்சத்தின் மீதோ; ஊழல் மீதோ அல்ல. கருத்து வேறுபாடுகள் எல்லாம், எண்ணிக்கையில் அடங்கா; அளவுக்கு மிஞ்சிய இலட்சம் கோடிகள் என்று வரும்போதுதான், ஊழல் ஒழிப்பு என்ற குரல் ஒலிக்கத் தொடங்குகின்றது.
ஆக, ஊழல், இலஞ்சம் என்பது, சமுதாயத்தில் படிந்திருக்கும் மாசு, அழுக்கு, அசுத்தம். மாசுவினை சலவை செய்து அகற்ற வேண்டும். அனைவரும், அழுக்கை அகற்றி சுத்தம் செய்யும் செயலில், தங்களால் இயன்ற அளவு ஈடுபட்டு இருந்திருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு அகன்று, சமுதாயம் தூய்மை நிலையை அடைந்து இருக்கும்.
ஆனால், இன்றைக்கு ஆராவாரம்தான் அளவுக்கு அதிகமாக அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. அழுக்கை அகற்றுவதை விட்டுவிட்டு, ஊழல் என்ற அசுத்தத்தை அள்ளி, தங்களது உடல் எங்கும் பூசி, அவதாரமாக உருவெடுக்க முயற்சி செய்வது, மடமையான செயல்.